Sunday, January 27, 2013

நம்மை உலுக்கி எழுப்பும் உலகநாயகனின் விஸ்வரூபம்!


நூறாண்டு கண்ட வெள்ளித்திரையில் விஸ்வரூபம் எடுத்து தமிழ்த் திரையுலகம் தொழில்நுட்பத்தில் சதம் அடித்து விட்டது என்றே சொல்லலாம்! நிலவில் காலடி வைத்த Neil Armstrong பாணியில் சொல்வதானால்: This is one small step for Kamal, one giant leap for Tamil Cinema.


ஒரு ஆங்கிலப் படம் போன்ற ஆரவாரமில்லாத ஆரம்பக் காட்சிகள். கதக் நாட்டியக் காட்சிகள் கமல் எனும் மகா கலைஞனின் மேல் நமக்குள்ள காதலுக்கு வலுவூட்டி நம்மைக் காற்றில் மிதக்க வைக்கின்றன, பரவசத்தில். குரல், பேச்சு, நடை, உடை, பாவனை, நளினம் எல்லாம் ஒரு சேர நம்மை அசத்துகிறார் கமல். இங்கே ஆண்ட்ரியாவும்  நம்மைக் கவர்கிறார்!


அடுத்த அரை மணிக்குள்ளாகவே, கமலின் இரண்டாவது முகம் வெளிப்படும்  CLIMAX க்கு நிகரான காட்சியில் விமானம்...மன்னிக்கவும், படம் take-off ஆகிறது. அரங்கமே அதிர்கிறது இந்தக் காட்சியில்... பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் என்னை மறந்து கை தட்டினேன், திரை அரங்கில்!

ராகுல் போஸ் அதிரடியாக அறிமுகம் ஆகிறார். படம் முழுவதும் அசத்துகிறார் தம் அமைதியான வில்லன் தாண்டவத்தில். இந்தத் தாலிபான் தளபதி, அமெரிக்க உளவுத்துறை இணையத்தையும், அதிரகசிய ஆவணங்களையும் அனாயாசமாகப் பயன்படுத்துகிறார், தன் கணினி மூலமாகவே!

பின்பு, கமல் தன் மூன்றாவது முகத்தைக் காட்டிப் படிகளில் இறங்கி வரும் போது மயங்கி விழுவது கதாநாயகி பூஜா மட்டுமில்லை, ஒட்டு மொத்த அரங்கமே தான்... ஆண்கள் உள்பட.

ஆப்கானிஸ்தான் காட்சிகள் அசத்துகின்றன. அல் கொய்தாவை ஊடுருவி, அவர்கள்  பயிற்சியில் பங்கு பெற்று, தாலிபன் தரப்பிலான வாதங்களையும், அவர்களின் அப்பட்டமான, அளவு கடந்த வன்முறை கலந்த ஏற்பாடுகளையும், தீர்ப்பாடுகளையும்  அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு கலாச்சாரத்தையும் தத்ரூபமாக  நம்   கண்முன்னே படைக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் மிகவும் மெனக்கெட்டு இயக்குனரின் கனவை நனவாக்கியுள்ளனர் இந்தக் காட்சிகளில்.

நமக்கெல்லாம் புறா என்றாலே போர்நிறுத்தம் தானே நினைவுக்கு வரும்! தாலிபான்களுக்கும் அப்படித்தான், ஆனால் வழக்கம் போல் தலைகீழாக!

படம் முடியும் போது நான் நிறைவேற்றிய தீர்மானம்: வீட்டில் பரண்மேல் இருக்கும்  Periodic Table ஐ எடுத்து, தூசு தட்டிப் படிக்க வேண்டும்..  அடுத்து வரப்போகும் கமல் படங்களை எளிதில் புரிந்து கொள்ளவும், நன்கு ரசிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனென்றால், தசாவதாரத்தில் வில்லனின் கொடூர வைரஸ் வீச்சிலிருந்து உலகமே தப்ப உதவிய ஆயுதம் NaCl (Sodium Chloride), விஸ்வரூபத்தில்  வில்லனால் கையாளப்படுவது Cs (Caesium).


கமலின் வழக்கமான  குறும்புகளும், "அக்மார்க்"  நகைச்சுவையும் படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே மிளிர்கின்றன.


பூஜா குமார் (கமலின் மனைவியாக) ரொம்பவே தெளிவான, தன்னலம் மிக்க, கணவனை ஒரு  (அடையாளச்) "சாவி"யாகவும், (அமெரிக்க) "விசா"வாகவும் மட்டுமே பார்க்கும், பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் விபரீத விஸ்வரூபமாக வலம் வருகிறார். ஒரு "நீயா நானா" நிகழ்ச்சியில் மாதம் ரூ.50000/- pocket money கேட்ட கல்லூரி மாணவியை நமக்கு நினைவூட்டுகிறார்.

என்னைக் கேட்டால், விஸ்வரூபம் சமீபத்தில் வெளியான James Bond படத்தைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது  என்றே சொல்லுவேன். அதற்கு ஆதாரமாக,  பட முடிவில், கமல்  James Bond போலவே  பூஜா குமாருடன் படுக்கையில் காட்சி தருகிறார்.

முத்தாய்ப்பாக: கமல் ரசிகர்களுக்குப்  பொங்கலும் தீபாவளியும் ஒன்றாய்ச் சேர்ந்த மாபெரும் அதிசயப் பண்டிகை விஸ்வரூபம்!

- மனம் திறந்து... (மதி).


பின் குறிப்பு:

1. இப்பதிவின் தார்மீகத் தலைப்பு, தமிழகத்தில் படம் வெளியிடப்படும் முன் (சனவரி 27 அன்று) வைத்தது -  "விஸ்வரூபம்: வெந்த புண்ணில் வேல்...?" : இந்த அரிய படத்தைப் பார்க்க முடியாமல் கோடானு கோடி திரைப்பட ரசிகர்கள்  தமிழ்நாட்டில்  தவிக்கும்  போது, நான் மட்டும் முதல் நாள் முதல் காட்சியே  இங்கே ஹைதராபாத்தில் பார்த்ததோடு மட்டுமின்றி அதைப் பற்றி இவ்வளவு சிலாகித்து அசை போடுவது, எழுதுவது.

2. இப்பதிவு, விஸ்வரூபம் படத்தின் ஒரு முழுமையான அல்லது திறமையான  விமர்சனம் அல்ல. மிகச் சிறந்த, வழக்கம் போல் சர்சைக்குள்ளான,  ஒரு கமல் திரைப்படத்தைப் பார்த்த சாதாரண ரசிகனின்  மன  உணர்வுகளின் பகிர்வு. அவ்வளவே!

6 comments:

மனம் திறந்து... (மதி) said...

சோதனை பின்னூட்டம்!

ராஜ் said...

தெளிவான பார்வை. உண்மையில் இந்த படத்தை அல்கொய்தாவும், அமெரிக்க ஜனாதிபதியை கண்ணில் சுட்டதற்கு அமெரிக்க அரசும் தான் எதிர்த்து போராட வேண்டும், நம்ம ஊரில் முஸ்லிம் அமைப்பு போராடுவது பெரிய முட்டாள்தனம்.

Anonymous said...

well said Raj

Anonymous said...

It is shocking and sad to see that even educated muslims do not open their mouth against the stupidity and arrogance being committed in the name of cultural policing for cheap political mileage. They don't realise that this will be counter productive against their own community.

Anonymous said...

எது சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி..?
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ஓடாது என்று பி.ஜெய்னுலாப்தீன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெய்னுலாப்தீன் வடிவில் பால்தாக்கரேயைப் பார்த்தேன். இந்த அறிவிப்பும் மிரட்டலும் முட்டாள்தனமானது. கண்டிக்கத்தக்கது. வேடிக்கையானது.

அமைதியை விரும்புகின்ற, கடினமாக உழைக்கின்ற, அப்பாவியான தமிழக முஸ்லிம்கள் மீது சேறும் கல்லும் வாரி இறைத்திருக்கின்றார் கமல் ஹாஸன். கமல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒட்ட நறுக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. அவருடைய விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதிலும் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. இந்திய வரலாற்றிலேயே விஸ்வரூபம் போன்று மோசமான படம் எடுக்கப்பட்டதில்லை. ஒப்புக்கொள்கின்றேன்.

ஆனால் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்வதாக அறிவிப்பதும் அரசாங்கத்தையும் மக்களையும் மிரட்டுவதும் எந்தவகையிலும் சரியானதல்ல. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு இயைந்ததும் அல்ல. பால் தாக்கரே போன்ற பாசிஸ்டுகள் வேண்டுமானால் அவ்வாறு மிரட்டல் இட்டு காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். சட்டத்திலிருந்துத் தப்பித்துவிட்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்துகொள்வது எந்த வகையிலும் அழகு அல்ல.

வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததன் மூலமாக பி.ஜே கமல் ஹாஸனைப் போன்றுதான் நடந்துகொண்டிருக்கின்றார். இஸ்லாத்தைக் குறித்தும் தமிழக முஸ்லிம்களைக் குறித்தும் கமலுக்கு இழிவான, கேவலமான கருத்து இருந்தது. தன்னுடைய அந்த இழிவான கருத்தை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது சினிமா பைத்தியங்கொண்ட, அப்பாவியான, அன்பான மக்கள் மீது திணிக்க முற்பட்டார் கமல். பி.ஜேயும் அதே தொனியில்தான் குரல் கொடுத்துள்ளார். இது நல்லதல்ல.

இது நம்முடைய நோக்கத்திற்கே கேடு விளைவிப்பதாகத்தான் முடியும். இப்போது காலம் மாறிவிட்டது. ஆட்டத்திற்கான விதிகளும் நெறிகளும் மாறிவிட்டன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பால்தாக்கரேயாலேயே ஷாரூக்கானின் ‘மை நேம் இஸ் கான்: ஐயம் நாட் எ டெரரிஸ்ட்‘ படத்தைத் தடை செய்ய முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இது போன்ற தாக்கரே தனமான மிரட்டல்கள் இந்தக் காலத்தில் உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது போன்ற மிரட்டல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்குத்தான் உதவும். கமல்ஹாஸனுக்குத்தான் உதவும். பி.ஜே.யின் இந்த மிரட்டலிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்.

கமலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நீண்ட, நீண்ட, நீண்ட சட்டப் போரில் அவரை இழுத்து அடிப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நீதிமன்றமாக அலைய விடுங்கள். ஆற்றல் அனைத்தையும் உறிஞ்சி விடுங்கள். நிச்சயமாக அவர் மண்டியிடுவார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதனையும் செய்வார். இன்றைய நீதிமன்ற அமைப்பு இருக்கின்ற நிலையில் இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் கேட்கலாம். அந்த வெறிபிடித்தவன் சட்டச் சிக்கல்களிலிருந்து மிக இலாகவமாக தப்பித்து வந்துவிட மாட்டானா, என்றும் நீங்கள் கேட்கலாம். சரிதான். அந்த வாய்ப்பும் இருக்கின்றதுதான். என்றாலும் சட்டரீதியாகத் தீர்வும் நீதியும் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கின்றது. சட்டரீதியாக இதனை அணுகுவதுதான் சரியான வழிமுறை ஆகும்.

Anonymous said...

அடுத்ததாக, இஸ்லாத்தின் அமைதித் தூதை எடுத்துரைப்பதற்காக கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், அரங்கக் கூட்டங்கள்,பொதுக்கூட்டங்கள், தேநீர் விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதிக அளவில் நடத்த வேண்டும். கருத்து சுதந்திரத்தின் எல்லைகள் என்ன என்பதைக் குறித்தும் இஸ்லாம் சொல்வதென்னவென்பதைக் குறித்தும் பேச வேண்டும். விஸ்வரூபம் போன்ற கேடுகெட்ட,இழிவான, அருவருப்பான படங்கள் ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக, அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கலாம். திரைப்படங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து தவறாகச் சித்திரிக்கப்படுவது தொடர்பான நம்முடைய கவலையை,குமுறலை, வேதனையை, கோபத்தை வெளிப்படுத்துவதற்காக அனைத்துவிதமான அமைதியான, ஆக்கப்பூர்வமான,சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய மார்க்கம் நம்முடைய செயல்களிலும் அன்றாட வாழ்விலும், நடப்புகளிலும் வெளிப்பட வேண்டும். இனிய மார்க்கத்தின் அன்பான அறவுரைகள் நம்முடைய செயல்பாடுகளில் புலப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அவதூறு பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு இது ஒன்றே வழி. ஒன்றைக் கவனித்தீர்களா?முஸ்லிம்களை வில்லன்களாய், தேசத் துரோகிகளாய்,பயங்கரவாதிகளாய்ச் சித்திரித்து எண்ணற்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த கேப்டனும் அர்ஜுனும் போட்டி போட்டுக்கொண்டு கமலை விட அதிகமான எண்ணிக்கையில் இத்தகைய படங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றால் உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் நம்முடைய நண்பர்களின் கருத்து மாறிவிட்டதா, என்ன? மக்கள் திரைப்படப் பிம்பங்களைவிட இரத்தமும் சதையுமாய் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களைப் பார்த்துதான் உங்களையும் என்னையும் பார்த்துத்தான் தாக்கம் பெறுகின்றார்கள்.

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடனான நம்முடைய நட்பும் உறவும் நம்முடைய செயல்பாடுகள், நடத்தை,அணுகுமுறை, பழகும்விதம் ஆகியவற்றைப் பொருத்தே அமையுமே தவிர திரைப்படங்களில் தவறாகச் சித்திரிக்கப்படுகின்ற மாயைகளின் அடிப்படையில் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய செயல்பாடுகளும் நடத்தையும் அன்பும் பண்பும் நிறைந்ததாய், நேசமும் பாசமும் மிகுந்ததாய், சத்தியமும் வாய்மையும் ததும்பியதாய் இருக்குமேயானால் எத்தனை கமல்கள் வந்தாலும் எத்தனை கேப்டன்களும் அர்ஜுன்களும் எத்தனை படம் எடுத்தாடினாலும் எத்தனை விஸ்வரூபங்கள் வந்தாலும் உறவையோ நட்பையோ பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.இந்த நாள் வரை இஸ்லாத்தை ஏற்றவர்களில் 99 சதவீதத்தினர் நம்முடைய நடத்தையையும் கனிவையும் பார்த்துதான் வந்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை.
விஸ்வரூபத்தை எதிர்கொள்வதற்கு இதுதான் சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி.

-T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

Post a Comment

ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!