Tuesday, April 19, 2011

லேனா தமிழ்வாணன் காரணமில்லாமலே கோபித்துக் கொண்டாரே... ஏன்? எதற்காக?


ஒரு ஞாயிறு பிற்பகல், வழக்கம் போல், அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள என் நண்பன் அரவிந்தனின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் பாருங்கள்:   "லேனாவுக்கு உன்மேல் கோபம்" என்று,  ரொம்பவும் கூலாக! கேட்ட நானோ அதிர்ந்து போனேன்! ஏன்? எதற்காக? எப்படி? எப்போது நடந்தது இது? என்று ஆயிரம் கேள்விகள் என் மண்டைக்குள் சுற்றிச் சுற்றி சூறாவளியாய்  உருவெடுத்தன, சுனாமி போலவே தலைமுடி வேர்களில் வந்து மோதித் தாக்கின! தலையே வெடித்து விடும் போலிருந்தது எனக்கு!

"நீ என்னவோ அவரிடமிருந்து விலகிச் செல்கிறாயாமே, அவரைக் கண்டு கொள்வதில்லையாமே?" இது தான் அவர் கோபத்துக்குக் காரணம் என்றார் என் நண்பர். மேற்கொண்டு துருவிக் கேட்டதற்கு, இவ்வளவு தான் எனக்குத் தெரியும் இதற்குமேல் என்னைக் குடையாதே என்று அலுத்துக் கொண்டார் நண்பர். என்னடா இது நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதே என்று நொந்து போன நான், சரி கிளம்பு, ஒரு எட்டு போய் அவரைப் பாத்துப்  பேசிட்டு வந்திடலாம்னு சொன்னேன்! நண்பனின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் தான் லேனாவின் வீடு. உடனே கிளம்பினோம்!

நல்ல காலம், நாங்கள் போன போது அவர் வீட்டில் இருந்தார்! அப்பாடா...என்று நானும் என் மனதைத் தேற்றிக் கொண்டேன்! விவரிக்க முடியாத ஒரு ஆச்சரியம் அவர் முகத்தில் தெரிந்தது! அப்போது, அங்கே எங்களை அவர் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை! ஆனாலும், அவருக்கே உரிய வாஞ்சையான,  இன்முகத்துடன் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் லேனா! 

முறையான முதல் அடுக்குப் பரிமாற்றங்கள் நடந்தேறின! குசல விசாரிப்புகள், நண்பர் நலன்கள் சினிமாப் பட டைட்டில்ஸ் மாதிரி ஓடி ஓய்ந்தன! அடர்த்தியான, அருமையான, சுவை நிரம்பிய பழச்சாறு மூன்று தடித்த கண்ணாடி தம்ளர்களில் வந்து இறங்கியது முக்காலியின் மேல் எங்களுக்காக! 

நான் வீடு தேடி வந்ததையே மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தும், நினைத்தும் கொண்டிருக்கும் லேனாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன், பழச் சாற்றைப் பதம் பார்த்துக் கொண்டே! எதோ என்மேல் கோபமாக இருக்கிறீர்களாமே, அரவிந்தன் இன்று தான் சொன்னார் என்றேன், நண்பனைக் காட்டி. அடடே, அது ஒண்ணும் இல்லைங்க என்று முதலில் மழுப்பினார், லேனா. 

நான் விடாமல் வற்புறுத்தியதின் பேரில் தொடர்ந்து பேசினார்: அது ஒண்ணும் பெரிசா இல்லீங்க....போன வாரம், கல்லூரியில் உங்களைப் பார்த்துக் கை அசைத்தேன், சிரித்தேன், நீங்கள் கண்டு கொள்ளாமலே போய்விட்டீர்கள், அது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது, என்றார்! மேலும் சற்று விவரங்கள் கேட்டறிந்த பிறகு நான் என் நிலையை விளக்கினேன்: நான் உங்களை உண்மையிலேயே கவனிக்கவில்லை! வேறு நண்பர்களோடு பேசிக் கொண்டு போனதில் உங்களைப் பார்க்காமலேயே சென்று விட்டிருக்கிறேன்! இது தான் உண்மை! இல்லா விட்டால் உங்களை நான் அலட்சியம் செய்ய வேண்டிய காரண காரியம் எதுவுமே இல்லையே, என்னை நம்புங்கள் நண்பரே என்றேன்! நானும் அப்படித்தான் நினைத்தேன், ஆனாலும் என்னவோ,  நீங்கள்  என்னிடமிருந்து விலகிப் போக விரும்பியதாக உணர்ந்து கவலைப் பட்டேன், ஆதாரமில்லாமல், என்றார் லேனா. 

உண்மையைப் புரிந்து கொண்ட பின் அவர் தூக்கிப் போட்டது தான் மிகப் பெரிய குண்டு! நான் ஏதோ அரவிந்தனிடம் இப்படிச் சொன்னதை நீங்கள் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொண்டு, என் வீடு தேடி வந்து நிலைமையை விளக்கி நட்பை நிலை நாட்டுவீர்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...நீங்கள் உண்மையிலேயே மிக உயர்ந்த மனிதர் தான்....  A True Gentleman! என்றாரே பார்க்கலாம்! எனக்கோ கையும் ஓட வில்லை, காலும் ஓடவில்லை! நண்பரே, ஏன் இதை இவ்வளவு பெரிசு படுத்துகிறீர் என்று அவரைச் செல்லமாய்க் கடிந்து கொண்டு, மேலும் கொஞ்ச நேரம் அளவளாவி மகிழ்ந்து பின் லேனாவிடமிருந்து பிரியா விடை பெற்றோம், நானும் அரவிந்தனும்! 

இது நடந்தது:  நாங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது,  எழுபதுகளில்! அவர் தமிழ் இலக்கியமும், நான் ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்த காலம்!  பசுமையான, நெஞ்சை விட்டு நீங்காத இனிய நினைவுகள், என் பிரிய வாசகர் ஒருவர் உபயத்தில் இன்று மேலே வந்தன  நீர்க்குமிழிகள்  போல!

லேனா இன்று எழுதுவது எல்லாம் இவ்வாறு வாழ்ந்தும்,  உணர்ந்தும், சுவைத்தும், தெளிந்தும் பதப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறிகளும், வாழும் வழிகளும்,  வெற்றிப் படிகளும் தானேயன்றி  வியாபாரத்துக்காக அச்சிடப்படும் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை  அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்!

Lena is a True Gentleman to the Core in every sense of the term!

- மனம் திறந்து... (மதி). 

இலவச  இணைப்பு:

  1. என் வாசக நண்பர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் எதேச்சையாகப் பேசிக்கொண்டிருக்கும் போது, லேனாவை ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப் போவதாகச் சொன்னார். அவருக்கு எழுதிய பதிலாக ஆரம்பித்தது தான் இந்தப் பதிவு. 
  2. மிகப் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை! ஆனால் சுவையான அனுபவம் தானே, நிறையப் பேர் ஆவலோடு படிப்பார்களே என்று தான் இங்கேயே பகிர்ந்து விட்டேன்!
  3. தான் தமிழ்வாணன் மகன் என்பதை மறந்தும், மறைத்தும், லக்ஷ்மணன் ஆகவே எங்களுடன் இயல்பாகப் பழகினார் லேனா என்பதே இப்பதிவின் அடிநாதம்! வேறு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
  4. ஒரு  சிறிய முடிச்சை வைத்து ஒரு சுவையான பதிவை(?!) எழுதுவது எப்படி என்று நான் கற்றுக் கொள்ள உறுதுணையான முயற்சி  என்று வேண்டுமானால் சொல்லலாம்!
  5. பொதுவான செய்தி: வாழ்க்கையில் உயர்பவர்கள் பெரும்பாலும் திடீரென்று முளைப்பதில்லை! ஒரு நீண்ட நெடும் பயணத்தில், தங்களைத் தயார் செய்து கொண்டு, பலவாறான இடர்களையும், பரிசோதனைகளையும், தனிமனித வாழ்வின் சுக, துக்கங்களையும் கடந்து, பல்வேறு நிலைகளிலும், வகைகளிலும்  சமுதாயம் இவர்களைப் பதம் பார்த்துப் பரீட்சை செய்த பிறகு, இவர்கள் நமக்குத் தேவையானவர்கள் என்று உணர்ந்து,  தட்டிக் கொடுத்துத் தளமும், தடமும் அமைத்துக் கொடுக்கும் வரையிலும் பொறுத்திருந்து,   தம் தேடலை அணையா விளக்காக அடைகாத்து,  உயிரூட்டி வளர்ப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!
  6.  Lena's Photo, courtesy: http://www.tamilvanan.com/

Monday, April 4, 2011

"தோனி ஒரு முட்டாள்!" ஆங்கிலேயரின் அடாவடிப் பேச்சு!


பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் உட்கார்ந்து பார்ப்பதுதான் கிரிக்கெட்டு என்று இவர்தான்  மிகக் கேவலமாகச் சொன்னாராம்!

கொளுத்தற வெயில்ல
மேட்ச் பாக்கறது
இவ்ளோ கஷ்டமா
இருக்கேங்கிற கோவத்திலதான்
இப்படிப் பொசுக்குன்னு
சொல்லிப்புட்டீங்களோ?!  
 
என்ன தைரியம் இவருக்கு? இவரைச் சும்மா விடலாமா? கொஞ்சம் குறுக்கு விசாரணை செய்யலாம் வாங்க!

பெரியவரே!
நீங்கள் சொன்னது உண்மையென்றால், இறுதிப் போட்டியில், கோப்பைக்காக ஆடிய இரண்டு அணிகளில், அதிக முட்டாள்கள் இருந்த அணிதானே வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?!

குறைந்த பட்சம், 
போட்டியிட்ட இரண்டு அணித்தலைவர்களில் யார் பெரிய,  வடிகட்டின முட்டாளோ, அவரது அணியாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?

எழுந்து நடக்கும்
குழந்தை முதல் எழுந்திருக்கக்கூட முடியாத முதியவர் வரை,   நூற்றுப் பத்து கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சனிக்கிழமை இரண்டு மணிக்கு மேல் உலகத்தையே மறந்து, உலகக் கோப்பையை மட்டுமே பார்த்தார்களே,  அவர்கள் அனைவருமே முட்டாள்களா?

செல்வாக்கு
மிக்க, செல்வத்தலைநகராம், பரபரப்பான, தூங்காமாநகர்  மும்பைக்கு அரசு விடுமுறையே அறிவித்தார்களே,  அவர்கள் முட்டாள்களா?

தலைபோகிற வேலையெல்லாம்
கூட அப்புறம் பாத்துக்கலாம் என்று ஒத்திப் போட்டுவிட்டு, நம்பளை ஆளை வச்சு அடிக்கிற பாகிஸ்தான் பிரதமரையே அன்போடு அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆனந்தமாய் அரையிறுதி ஆட்டத்தைப் பார்த்தாரே மன்மோகன் சிங்,  அவர்
கடவுள்... பிரசாதம்... பக்தன்!
22 வருட வேண்டுதல் ...இல்லீங்களா?      
என்ன முட்டாளா?  {2G ஊழல் விஷயத்திலே வேணும்னா அவர் கொஞ்சம் அப்படித்தான்னு  நினைக்கறதிலே தப்பே இல்லைன்னு கூட சொல்லலாம்:( }!

சினிமாவுக்கு வருபவர்களிடம், கிரிக்கெட்டைக் காண்பிப்போம் என்று சொல்லி அடிவாங்காமல், அமோக ஆதரவு பெற்றார்களே அந்தத் திரையரங்கு முதலாளிகள், அவர்கள் முட்டாள்களா?

பரிவே
உருவாகி, சற்றும் சளைக்காமல், சமையலறைக்கும் நடுக்கூடத்துக்குமாய் (ஹால்) நடந்து நடந்து மோர், தேநீர், குளிர் பானங்கள், நொறுக்குத் தீனி, காப்பி, பஜ்ஜி, பல்சுவை உணவு என்று தன் வீட்டாருக்கும், கூடிக் கொண்டாட வந்த நண்பர் கூட்டத்துக்கும் கொடுத்த வண்ணமே இருந்தார்களே அன்புத் தாய்மார்கள், அவர்கள் முட்டாள்களா?

ஒட்டு மொத்த இந்தியாவே, அந்தப் பதினோரு பேருக்காக - சாதி, இன, மத, மொழி மற்றும் பல்வேறு பிரிவினைப் பிசாசுகளை ஓர் அறையில் அடைத்து வைத்துவிட்டு   - ஒரே ஜீவனாய்,
தோனி உயர்த்தியது இந்தக் கடைசிப்  பந்தை மட்டுமா?
இல்லை,  இல்லை...  நம் நாட்டையே தானே!
 இந்தியனாய் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்ததே, அது மகா முட்டாள்தனமா?

கோடானுகோடி மக்கள்,
தன் ஒவ்வொரு அசைவையும், நினைப்பையும், முடிவையும், தீர்மானத்தையும் பெரிய பூதக்கண்ணாடியைக் கையிலெடுத்துக் கொண்டு அணு அணுவாகத் தோண்டித் துருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்ற பயம் கொஞ்சமும் வெளியில் தெரியாதவாறு, இத்தனை வீரத்துடனும், விவேகத்துடனும் தன் குழுவை வழி நடத்தி வெற்றியும் பெற்ற, தோனியா முட்டாள்?

தலைமைப்
பொறுப்பில் இருக்கும் போது, தான் என்ன செய்ய வேண்டும் என்று மற்ற எல்லோரும் எதிர்பார்க்கிறார்களோ அதையே செய்தால், தோல்வியே அடைந்தாலும் கூட அடிவிழாமல் தப்பிக்கலாம் என்று கோழைபோல் சிந்திக்காமல்; எந்த நேரத்தில் எப்படிச் செயல் பட வேண்டும் என்று தீவிரமாக ஆராய்ந்து, முறையான கலந்தாலோசனையும் செய்தபின், முடிவெடுத்து நிறைவேற்றி, முன்னேறி,  "செய் அல்லது செத்து மடி" என்று தனக்குள்ளேயே வீர முழக்கமிட்டு, தன் முறை வரும் முன்பே களத்தில் இறங்கி மிக நிதானமாகவும், படுசாதுர்யமாகவும் போரிட்டு, வெற்றி குவித்துக் கோப்பை கொணர்ந்த,  உலகம் போற்றும் உன்னதத் தலைவன், தோனி முட்டாளா?

கோப்பையைக்
 கொண்டுவந்து குழுவினரிடம் கொடுத்துவிட்டு, கொண்டாடுங்கள் தோழர்களே, இது உங்களால்தான் சாத்தியமானது என்று சொல்லாமல் சொல்லி, விலகி நின்று வேடிக்கை பார்த்தாரே, எங்கள்  தோனி,  இவரா முட்டாள்?

இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்! கல்லூரிப் படிப்பையே கூட முடிக்க முடியாமல் போன  இந்தக் காவியத் தலைவன், உலகப்  பிரசித்தி  பெற்ற மேலாண்மை, வியாபார  மேற்படிப்புக்  கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்  கழகங்களில் பணியாற்றும், ஆளுமைத்துறையில் 
உலக நாயகனான நம் நாட்டு நாயகன்!
அனைத்தையும் கரைத்துக் குடித்த, பேராசிரியர்களுக்கே கூட,  தலைமை  என்றால்  என்ன? தலைவன் எப்படி இருக்க  வேண்டும்? முதலில் அவன் எப்படித் தன்னையே தயார் செய்து கொள்ள வேண்டும்? மற்றவர்களிடம் எப்படி நடந்து  கொள்ள  வேண்டும்?  பல  மனிதர்கள் அடங்கிய ஒரு குழுவை, ஒரே பார்வையும்,  குறிக்கோளும், அணுகுமுறையும் கொண்ட  தனிமனிதன்  போலவே  மாற்றியமைக்கும் மந்திரவாதியாவது எப்படி? பலவிதமான ஆசைகளையும், பயங்களையும், தவிப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொண்டு வளரத் துடிக்கும் தன் குழுவினரைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பது எப்படி? அவர்களை உரசலில்லாமல், குதறித் தள்ளாமல் வெற்றியை  நோக்கி  வழி நடத்திச்  செல்வது  எப்படி?  என்றெல்லாம் உலகளாவிய, திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் நேருக்கு நேர் (Live) விரிவுரையாற்றிப் புரிய வைத்திருக்கிறாரே இன்று, இந்த உலக நாயகன் தோனியைப் பார்த்து, முட்டாளென்று சொல்ல மனமோ, தைரியமோ வருமா உங்களுக்கு?
I Support Jan Lok Pal Bill

சொல்லுங்கள் பேரறிஞர் பெர்னார்ட் ஷா அவர்களே! சொல்லுங்கள்! அடடே, அவர் நம்முன் தோன்றி பதில் சொல்ல மாட்டாரோ  ...! அப்படியானால்,  அவர் சொன்னது சரிதான் என்று மனப்பூர்வமாக நம்பி, இன்றும் கூட அவருக்காக வாதாடத் தயார் என்று சொல்லி முன்வரக்கூடிய, அறிஞர் பெருமக்கள் யாராவது இருந்தால், அவர்களாவது அன்பு கூர்ந்து பதில் சொல்வார்களா!

- மனம்திறந்து ...(மதி).

பின் குறிப்பு:
  1. எது எப்படி இருந்தாலும், ஏப்ரல் மாத ஆரம்பத்திலே முட்டாள்களைக் கொண்டாடுவதிலோ, அவர்களைப் பற்றிப் பேசுவதிலோ அல்லது நமக்கே தெரியாமல் நம்முள் புதைந்து கிடக்கும் முட்டாள்தனங்களைச் சுய பரிசீலனை செய்யத் தூண்டுவதிலோ தப்பே இல்லீங்களே!
  2. கொஞ்சம் கூட முட்டாள்தனமே இல்லாத மனித வாழ்க்கை நிஜமானதாகவோ,முழுமை பெற்றதாகவோ அல்லது சுவை நிறைந்ததாகவோ அமைந்ததாக   சரித்திரமே இல்லீங்கோ! ஹையா....ரொம்பவே சந்தோஷப் படறீங்க போல... இதுக்குத்தானே இங்கே வாங்க, வாங்கன்னு கூரைமேலேறிக் கூவிக் கூப்பிட்டேன்! ஆனா நீங்க என்னவோ ரொம்ப யோசனை பண்ணிட்டு மெதுவாத்தானே வந்தீங்க, அதுக்கு நான் என்ன பண்றது? :))) சரி, இனிமேலாவது நம்ம பதிவின் சுட்டியை எங்கே பார்த்தாலும் உடனே சொடுக்கிட்டு,  ஓடி வந்துடுங்க... நம்ம கடைக்கு! 
  3. அறிஞர் பெருமக்களுக்கு நான் விடுத்த சவாலான வேண்டுகோளைத் தன்னை அறியாமலே ஏற்றுக்கொண்டு, ஒரு உதவிப் பேராசிரியர் அவர் தரப்பு வாதங்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கிறார்.  இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்குத்  தமிழ் தெரியாது!  அவர் என்னுடைய வாதங்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை! ஆனாலும், நன்றாகவே  வாதாடி இருக்கிறார், இதோ, ஆங்கிலத்தில்: Cricket unites, but is there no world beyond?
  4. இந்தப்  பதிவு  எழுதி  சரியாக மூன்று வாரம் கூட முடியவில்லை.  ஆனால் இதற்குள்ளாகவே, என்னுடைய கருத்தை அமோகமாக ஆதரித்துள்ள  உலகப் புகழ் பெற்ற அமெரிக்கப் பத்திரிகையான TIME, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இன்னும் ஒருபடி மேலே போய்,  "அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் காட்டிலும்  தோனி செல்வாக்கு மிக்கவர்(சக்தி வாய்ந்தவர்)!"  என்று உலகின் கூரை மேல் ஏறி உரக்கச் சொல்லி இருக்கிறது பாருங்களேன், இதோ: Dhoni more influential than Obama: Time magazine. இதற்கு மேல் என்ன அங்கீகாரம் வேண்டும் இந்தப் பதிவுக்கு...? இல்லை... எனக்கு? இல்லை...இல்லை... இந்தியர்களாகிய நமக்கு?!
  5. Images Courtesy:- World Cup: http://www.espncricinfo.com Bernard Shaw: http://lib-1.lse.ac.uk/archivesblog/?p=82

Friday, April 1, 2011

அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! நிறைவுப் பகுதி!



முதல் பகுதியைப் படிக்காம, தப்பித்  தவறி நேரா இங்க வந்துட்டவங்க இங்கே சொடுக்குங்க: அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! மருத்துவர், கேப்டன், சிங்கம், ஆற்காட்டார் மற்றும்...?

மத்தவங்க வாங்க! வாங்க! அந்த மூத்த தலைவர் அப்படி என்ன சொன்னாரு அஞ்சாநெஞ்சனே அதிர்ச்சி  அடையற மாதிரின்னு தானே கேக்கறீங்க! அவரு அஞ்சாநெஞ்சனை  மாத்திரம் இல்லை, உங்களையும் என்னையும் சேத்தே ஏமாத்திட்டாருங்க! அவர் சொன்னது இதாங்க: 

"அரசியலுக்கும், பத்திரிகை உலகத்துக்கும் கொஞ்சம்கூடத்  தொடர்பில்லாத,  இந்த மனம்திறந்து...(மதி) ஏப்ரல்  முதல்  தேதி காலங்காத்தாலே இப்படியொரு அதிபுத்திசாலித் தனமான பதிவு போட்டா, நீங்க:
  • அதைப் படிச்சது முதல் தப்பு!
  • நம்பினது ரெண்டாவது தப்பு!!
  • இங்கே வந்து தொடர்ந்து படிச்சது மூணாவது தப்பு!!!
நம்பற மாதிரிதானேங்க எழுதியிருந்தாருன்னு சொல்ல வரீங்களா? ஐயோ, அங்கே தானேங்க அவர் ஜெயிச்சிட்டாரு!
ஆனாலும், ஒரு வகையிலே சந்தோஷப் படறேங்க! கிட்டத்தட்ட 250 பேருக்கு மேல் வந்தாலும், யாரும் அவரைப் பாராட்டல பாருங்க! அது மட்டுமில்லையே, பேருக்கு மேல அவருக்கு ஓட்டும் போடலையே! யாருக்கு ஓட்டுப் போடணும், யாருக்குப் போடக் கூடாதுன்னு ரொம்பத் தெளிவா இருக்கீங்க பாருங்க...இதை ...இதை ...இதைத்தான் எதிர் பார்த்தேன் உங்களிடம்...! இது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்குங்க! இவ்வளவு தெளிவா இருக்கிற உங்களை எல்லாம் நம்பித்தானேங்க நாங்க பொழப்பை நடத்துறோம்!  வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு! ஓங்கி உயர்க தமிழர் புகழும், வாழ்வும்! வணக்கம்... வணக்கம்... வணக்கம்!"

அவர் கிடக்கறாரு, விட்டுத் தள்ளுங்க ...! நம்ம விஷயத்துக்கு வருவோம்! இந்த ஏப்ரல் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு என்னுடன் ஒத்துழைத்த உங்க எல்லாருக்கும் நன்றிங்க! முழுக்க முழுக்கக் கற்பனையாகவே இருந்தாலும், கொஞ்சம் நம்பகத் தன்மை வரும்படி மண்டையைக் கொடைஞ்சு எழுதினது, அவ்வளவுதான்! எனக்குத் தெரிஞ்ச கொஞ்சூண்டு அரசியல் இதுக்குக் கைகுடுத்தது என்னவோ உண்மைதான்! ஆனா, நீங்க கோவிச்சுக்காதீங்க.... இது சும்மா விளையாட்டு தானுங்களே! 

இனி,  நம் கடையில் வியாபாரம் தொடரும், இயல்பாக! நீங்களும் நம்பிக்கையோடு வந்து, நல்ல பொருளை வாங்கிய மனநிறைவோடு திரும்பிப் போகலாம், வழக்கம் போல!

மீண்டும் நன்றி, வணக்கம்!

- மனம்திறந்து ...(மதி).


பின் குறிப்பு: 
  1. இந்த விளையாட்டால் யாராவது பாதிக்கப் பட்டிருந்தாலோ அல்லது உண்மையிலேயே மனம் வருந்தியிருந்தாலோ  அவர்களிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! தயவு செய்து மன்னித்து விடுங்கள்! 
  2. இது, வருமான வரியெல்லாம் போக, கையில் கிடைத்த  கால்வாசிச் சம்பளத்தை வைத்து இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் எப்படி சமாளிப்பது என்ற என் போன்ற பெரும்பாலோரின் சோகத்தையும், கவலையையும் கொஞ்சம் மறக்க உதவிய விளையாட்டே தவிற வேறொன்றுமில்லை, இல்லை, இல்லவே இல்லை!
  3. நீங்களும் நல்லவர் தானே, அப்போ எல்லாம் சரியாப் போச்சுன்னு சொல்லி,  இவரை மாதிரி கொஞ்சம் வாய்விட்டு சிரிங்க பாக்கலாம்! அட... அட.... ஹை ... ஹைய்யா ...சிரிங்க... சிரிங்க...சிரிக்கறீங்க... சிரிச்சிட்டீங்களே!!! :)))

அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! மருத்துவர், கேப்டன், சிங்கம், ஆற்காட்டார் மற்றும்...?


தற்போதைய அரசியல் சூறாவளிக்கிடையில், நிழலாய் உலாவரும் நம்முடைய பூனைப்படை தோண்டி எடுத்த திடுக்கிடும் தகவல் தான் இது! 

பலம் வாய்ந்த தமது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி போலத் தெரிந்தாலும், அப்பாவுக்குப் பின், தன் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருப்பதால், போதுமான பாதுகாப்பும், உத்தரவாதமும்  இல்லாத உணர்வு மேலோங்கிய  அஞ்சாநெஞ்சன் இந்த முயற்சிக்கு பூஜை போட்டிருக்கிறார் என்று தகவல்! தம்பியை ஓரம்கட்ட ஒரு புது வியூகம் தயார் செய்து விட்டாராம்!

இந்த ரகசிய சமையல் சேர்ந்து சமைக்கும் மற்ற கதாநாயகர்கள் யார், யார்?

தென் தமிழ்நாட்டில் அனைத்து MLA க்களும் தனக்குக் கட்டுப்படுவார்கள், ஆனால் வடக்கே அப்படி இல்லையே என்பதால் மருத்துவரின் உதவியை நாடி இருக்கிறாராம்! ஆட்சியில் முக்கிய பங்கு தருவதாகக் கூறி அவரை உள்ளே இழுத்துப் போட்டிருக்கிறாராம்! மத்தியிலும் அதிகப் பங்கு தருவோம் என்று உறுதி அளிக்கப்பட்டதாம்! 

இதுவும் முழுப்பலனைத் தராமல் போகலாம் என்பதால், முக்கிய பதவியும், பொறுப்பும், தகுந்த சன்மானமும் தருவதாகக் கூறி ஆற்காட்டார் உதவியையும் கோரியுள்ளதாகத் தெரிகிறது! அவருடைய உதவியால் தம்பிக்கு எதிராகக் கொடி தூக்கக் கூடிய மேலும் பல MLA க்களையும் தன் பக்கம் இழுக்கலாம் என்று திட்டம். (ஆட்சியைப் பிடித்து விட்டால் அனைவரும் இந்தப் பக்கம் வந்து விடுவார்கள், அது வேறு விஷயம்...)!

கேப்டன் ஏற்கெனவே போட்டிருக்கும் திட்டப்படி, தன் கட்சி MLA க்கள் மற்றும் பெருவாரியான அம்மா கட்சி MLA க்களையும் கூட்டிக் கொண்டு வந்தால், துணை முதல்வர் பதவி தருவதாகவும், இந்தக் கூட்டணி மிகவும் பலமானதாகவும், நிலையானதாகவும் அமையும் என்று அவரை நம்ப வைத்திருப்பதாகவும் கேள்வி!  கழகத்  தொலைக்காட்சிகள்  தன்னைக் கிண்டலடிக்கும் வேளையில், இந்த தெற்கத்தி ஒத்தடம் மிகவும் இதமாகவே இருப்பதால் உச்சிகுளிர்ந்து போனாராம் கேப்டன்!

எதிர்பாராமல் தாக்கப்பட்டு, குகையில் ஒய்வு எடுக்கும் சிங்கத்துக்கும் தூது அனுப்பப் பட்டுள்ளதாம்! எதிர்பார்த்தபடி, தேர்தலில் மறைமுகமாக ஆதரவு தந்து உதவியதற்குத் தகுந்த சன்மானம் தருவோம் என்பதே அடிப்படை உடன்பாடு! தம்பிக்கு எதிராக, கழக நலன் கருதி,  அப்போதே போர்க்கொடி தூக்கியவர் அவர்தானே! அதனால், கட்சிப்  புனரமைப்பில் இவருக்கு முக்கிய பங்கும், பொறுப்பும் தரப்படுமாம்!

இவ்வளவும் போதாது என்று, தன் கட்சியிலேயே நீண்ட காலமாகக் காத்திருக்கும் ஒரு மூத்த தலைவரை முன்வைத்துக் காய் நகர்த்தினால் மக்களும், மற்ற கட்சிக்காரர்களும் கூட மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறாராம் இந்த மதுரை இளவரசர்...! 

ஆனால்..., இதற்கு அந்த மூத்த தலைவர் போட்ட மிகச் சிக்கலான நிபந்தனை என்ன? அது அஞ்சாநெஞ்சருக்கே  அதிர்ச்சி தந்தது ஏன்? அடுத்த பதிவில் பார்க்கலாம், இங்கே:  அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! நிறைவுப் பகுதி!

- மனம்திறந்து ...(மதி).  

பின் குறிப்பு: 
  1. தேர்தல்ல ஓட்டுப் போடறதுக்கு முன்னாடி இங்கே ஒத்திகை பாத்துக்கலாமே நீங்க! ஓட்டைப் போட்டுட்டுப் போங்க!
  2. நான் ஒண்ணும் உங்க வாழ்க்கையை மாத்தி அமைப்பேன் அப்பிடி, இப்பிடின்னு பெரிய வாக்குறுதி ஒண்ணும் குடுக்கல, அதனால ஓட்டைப் போட்டுட்டு,  பின்னாடி, ஏண்டா  போட்டமுன்னு நீங்களும் வருத்தப் படப்போறதில்லே பாருங்க! 
  3. இங்கே பகிரப்பட்ட  ரகசியத் தகவல்கள் குறித்து  மாற்றுக் கருத்து கொண்டவர்கள் யாராவது இதைப் படித்துவிட்டு மிகவும் ஆவேசப்பட்டு என்னைத் தரக்குறைவாகத் திட்ட ஆசைப்பட்டால் தயவு செய்து உங்கள் கோபத்தை இங்கே வெளிக் காட்டாதீர்கள்! உங்கள் உணர்வு நியாயமானதாக இருந்தாலும் கூட,  அதை வெளிப் படுத்தும் விதம் சரியில்லாத ஒரே காரணத்துக்காக, மற்றவர்கள் உங்களைத் தப்பாக எடைபோடும் வாய்ப்பு இருக்கிறதே! அதனால், நீங்கள் சொல்ல விரும்புவதை  எல்லாம் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன்: manamthirandhu@gmail.com ; தவறாமல் பதில் அளிப்பேன், இது உறுதி! 
  4. உலகமே வியந்து, அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்து வரும் நம் நாட்டில் சிந்தனை, பேச்சு, கருத்து, எழுத்து, செயல்  இவையெல்லாம் ஆரோக்கியமாகவும், பூரண சுதந்திரத்துடனும் வளர இது ஒரு மகத்தான வழி! அதாவது, நாம் ஒருவரை ஒருவர் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்க்கலாம்!  ஆனால், நம்மில் யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்று நமக்கே உறுதியாகத் தெரியாத போது,  மற்றவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக வெட்டி மடிய வேண்டாமே!
  5. சரி...சரி...ஏதோ ஆட்டோ வர்ற மாதிரி சத்தம் கேக்குது நான் கிளம்பறேன்...! நீங்களும்  பத்திரமா  வீடுபோய்ச்  சேருங்க ! மீண்டும் சந்திப்போம், விரைவில்!

Monday, March 28, 2011

நன்றாக வாழ வேண்டுமா? சரியாகச் சாப்பிடாதீர்கள்!

என்னங்க இது, தலைகீழாப் பேசறீங்களே, நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தீங்கன்னு தானே கேக்கறீங்க! ஆமாங்க, இது ஒரு வித்தியாசமான சிந்தனை தாங்க! (அப்படி சிந்திச்சா தானேங்க "தரமான பதிவு" எழுத முடியும்? பின்னூட்டத்துக்கு  சூசகமா ஒரு "குறிப்பு" குடுத்துட்டேன்! எவ்வளவு தூரம் "வொர்க் அவுட்" ஆவுதுன்னு பாப்போமே :)) ) சரி, மொக்கை போதும்...  விஷயத்துக்கு வருவோம்! 

"சாப்பாடு கசக்குதே!"  என்று சொன்னதால்  அந்தக் காலத்தில்  குருகுலத்தை விட்டே  வெளியேற்றப்பட்ட  மாணவனின்  கதை உங்களுக்குத் தெரியுமல்லவா?! (தெரியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்!...என்னது? என்னோட மனைவியின் சமையலைப் பற்றி நானே குறை சொல்லாதபோது இவன் யார் சொல்வதற்கு என்ற கோபத்தில் தான் குரு அவனை விரட்டி அடித்தாரா...? அட...இந்தக் கோணம் கொஞ்சம் புதுசாத்தாங்க இருக்கு! ). இன்றைய கால கட்டத்தில், இதே நிபந்தனை இருந்தால், ஒரு பய கூட ஹாஸ்டல்லே தங்கிப் படிக்க முடியாதுங்களே! நல்ல வேளை, தப்பிச்சாங்க, பசங்க!

இன்று வரை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கூடத் தெரியாமல் சாப்பிட்டது,  சரியாகச் சாப்பிடாமலே  எழுந்து போனது அல்லது சாப்பாட்டையே    சுத்தமாக  மறந்து  போனது  எப்போது? எதற்காக? (கொசுவத்தி சுழலத் தொடங்கிவிட்டது...)

  • எல்லாம் ஒத்துப் போகிற இந்த வரனாவது, கடைசி நேரத்தில் எந்த வில்லங்கமும் வராமல், செட்டாகி, நம் பெண்ணின் திருமணம் நடந்தேறுமா என்ற ஆதங்கத்தை,  ஏக்கமிகு எதிர்பார்ப்பை  சற்று முன் வந்த கனிவான தொலைபேசி அழைப்பு  சற்றே தணித்து, மனதில் கொஞ்சம் பால் வார்த்து பசியைப் போக்கிவிட்டதே, அப்போதா?
  • பையனுக்கு Campus Placement மூலம் அகில உலகப் புகழ் பெற்ற (ஆனால் உள்ளே என்னவோ ஆண்டாள் பாடசாலை மாதிரியே இயங்கும்) நம்நாட்டு   top tier IT கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது அறிந்து, இரவு முழுவதும் தூங்காமல், மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, வருவோர் போவோர்க்கெல்லாம் சொல்லி மகிழ்ந்து, லட்டை வாரிக் கையில் திணித்து, நீங்கள் என்னவோ பச்சைத் தண்ணிகூட வாயில் படாமல் கார்யசித்தி விரதம் இருந்து, உடலும் மனமும் லேசாகி, நிஜமாகவே காற்றில் (50000 அடி உயரத்தில்) பறப்பது போல் உணர்ந்து, துவண்டுபோய், ஏதாவது குடும்மா என்று ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டு,  உங்கள் மனைவியின் தோளில் வந்து சரிந்தீர்களே... இரவு 9 மணிக்கு,  அப்போதா?
  • அலுவலகப் பிரச்சினையை மனதில் போட்டு உழப்பிக்கொண்டு, எப்படி மேலதிகாரியை இன்று சமாளிப்பது என்று குழம்பிப்போய் இரண்டாவது இட்லியைப் பாதி தின்றுவிட்டுத் தட்டிலேயே  (மீதமுள்ள  இரண்டரை இட்லிமேல்) கைகழுவியபோது, நிஜமாகவே பயந்துபோன உங்கள் மனைவி உங்களைப் பார்த்து மிரண்டு நின்றாரே,  அப்போதா?
  • பையனுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது...ஆனால் கட்ட வேண்டிய பணத்துக்கு இன்னும் வழி பிறக்கவில்லையே என்று இரண்டு நாள் பசியும், உறக்கமும் இன்றித் தவித்தீர்களே..., அப்போதா?
  • காதலி காத்துக் கொண்டிருப்பாள், ஏற்கெனவே நேரம் கடந்து விட்டது என்று  அம்மாவிடம் சொல்ல முடியாமல், அரைகுறையாய்ச் சாப்பிட்டு, அலறி அடித்துக் கொண்டு  ஓடினீர்களே,  அப்போதா?
  • உங்களுக்குப் பிடித்த கல்லூரியில் நீங்கள் விரும்பியபடியே ECE  கிடைத்த பேரானந்தத்தில் சாப்பிடாமலேகூட, கொஞ்சம் பயமும், நிறைய  சந்தோஷமும் மனதில் சுமந்துகொண்டு  முதல்நாள் கல்லூரிக்குப் பறந்து சென்றீர்களே, அப்போதா?
  • ஒருபிடி தயிர் சாதமும், அரை டம்ளர் மோரும் போதும் என்று சொல்லிப் புறந்தள்ளிவிட்டு, உலகத்தையே உங்கள் தலைமேல்  சுமப்பது போன்ற ஒரு கனமான உணர்வுடன், அது கருங்கல்லா, பிள்ளையாரா என்று கூடப் பார்க்காமல் வழியில் தென்படும்  எல்லாத்தையும் வேண்டியபடி,  "பிளஸ் டூ" பொதுத்தேர்வு எழுதப் புறப்பட்டுப் போனீர்களே, அப்போதா?
  • பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய், பையை ஒரு மூலையில் வீசி விட்டு, சீருடையைப் படுவேகமாய்க் களைந்து எறிந்து,  கையில் கிடைத்ததை  எடுத்து மாட்டிக் கொண்டு (கொஞ்சூண்டு சாம்பார் சாதத்தை வாயில் வைத்துக்கொண்டே... "சாப்டுட்டுப் போயேண்டா..." என்ற அம்மாவின் கூக்குரலைக் காதில் போட்டுக் கொள்ளாமலே) நண்பர்களோடு விளையாட வீதிக்கு ஓடினீர்களே, அப்போதா?

இவையெல்லாம்  நீங்கள் வாழ்க்கையின் அடிநாதத்தோடு   இரண்டறக் கலந்த தருணங்கள்...! உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் மகிழ்ந்தும், குழம்பியும், மயங்கியும், மலைத்தும், வருந்தியும், பயந்தும், லயித்தும் வாழ்ந்த தருணங்கள்!  

இப்போது சொல்லுங்கள்...நான் சொன்னது சரிதானே? 

அன்புத் தாய்மார்களே! சாப்பிடுவதற்காகவே வாழ்பவர்களுக்குச் சமைத்துப் போடுவதை விடவும், இப்படிச் சரியாகக்கூடச்  சாப்பிடாமல், வாழ்வதற்காகவே சாப்பிடுகிற இவர்கள் (வலைப்பூக்கள் எழுதுபவர்களும் இதில் அடக்கம்தானே!), அலைபாயும் பிறவிப் பெருங்கடலின்  கரையோரம்,  வாழ்க்கைப் படகிலிருந்து மெல்ல இறங்கி, அடுத்த வேளை அமைதியாகச் சாப்பிட  வரும் போது முகம் கோணாமல், ருசியாய் சமைத்துப் போடுங்கள், அன்பாய்ப் பரிமாறுங்கள்...!  உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம்... இங்கேயும், அங்கேயும்!

அம்மாடியோவ் ... தாய்மார்கள் கரண்டி, அன்னக்குத்தி, கண்ணைக்குத்தி, பிடியில்லாத கல்கத்தா  கடாய், அண்டான், குண்டான், என்று  கையில் கிடைத்ததை  எல்லாம்  எடுத்துக் கொண்டு அடிக்க வருகிறார்களே! சரி  சரி...மிகுமின்காந்த விசையின் உதவியுடன் "எந்திரன்" ரஜினியின் "சிட்டியாண்டவர்" அவதாரம் எடுக்கவேண்டியதுதான்! ஹப்பாடா! தப்பித்தோம்!

அடடே...எல்லாரும் விழுந்து கும்பிட ஆரம்பிச்சுட்டாங்களே...ஐயோ கடவுளே! இது என்ன கலாட்டா? எழுந்திருங்கம்மா...நீங்களோ, நானோ எந்தத் தப்பும் பண்ணலை! இந்தாங்க, அவங்க அவங்க பொருளைப் பார்த்து எடுத்துகிட்டு வீடு போய்ச் சேருங்க, போதும்! ஆளை விடுங்க தாயீ! நான் சொன்னது ஒரு சின்னக் கருத்து தானே, வேதவாக்கு இல்லையே! பிடிச்சா சந்தோஷப் படுங்க! இல்லையா... மறந்துடுங்க, அவ்வளவுதான்....! இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டா வேலைக்கு ஆகுமா...?!

- மனம் திறந்து ...(மதி).

பின் குறிப்பு: 
  1. நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலை! அதனால, கட்டாயம் ஓட்டுப் போடணும், template கமெண்டாவது போடணும், ஏன் அடிக்கடி இந்தப் பக்கம் வரமுடியலை என்று ஒப்புக்குச் சப்பாணியா ஒரு விளக்கம் சொல்லணும்கிற நிர்ப்பந்தமெல்லாம் இங்கே இல்லை உங்களுக்கு ...! 
  2. நீங்க பாட்டுக்கு சும்மா ஜாலியாப் படிச்சிட்டுப் போயிட்டே இருக்கலாமுங்கோ!
  3. என் தரப்பிலிருந்து நான் மட்டும் உங்களுக்கு நன்றி சொல்றேங்க...! இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுமில்லாம, இந்தப் பதிவையும்    பொறுமையாப் படிச்சிட்டுப் போறீங்களே, அதுக்காக! விருந்தோம்பல் தலைசிறந்த தமிழ்ப் பண்பாடு இல்லீங்களா?

Thursday, March 17, 2011

தலைப்பு, மேட்டரு... தனிக்குடித்தனம்! (PASSWORD புதையல்: பாகம் - 2 )

 
நான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி ,  PASSWORD புதையல் பற்றிய பரபரப்பான, சுவாரஸ்யமான  இரண்டாவது பதிவு இது.  பிரபலங்களும், சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களும் எப்படியெல்லாம் ரகசியப் புதையல் தேர்ந்து எடுக்கலாம், எடுப்பார்கள் என்று ஒரு அழகான கற்பனை இங்கே விரிகிறது, உங்கள் முன்னால், உங்களுக்காக!

Software Developer (Debugging பிடிக்காதவர்)
ஆணிய , நானே  புடுங்கணுமா ? எங்கே  வச்சேன்னே தெரியலையே!
 
அலுவலக சுகவாசி
சம்பளம் வாங்கறேல்ல, வேலையைப்பாருண்றானே! இன்னாய்யா இது புதுக்கதை?

வேலைக்காகவா ஆபீசுக்கு வர்றோம்? நம்ம சந்தோசத்துக்கும், பிகருக்காகவும்தானே!

நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டாங்களா! ஒலகம் உருப்படாதுய்யா!

வேலைக்குப்  போகும்  பெண்மணி  
அடிச்சிப்பிடிச்சி ஆபீசுக்கு வந்தாச்சு! ஸ்ஸ்ஸ்...இனிமேத்தான் ரெஸ்டு !!

வரவர இந்த மேனேஜர் பார்வையே சரி இல்லையே!

இவங்க குடுக்கற சம்பளத்துக்கு... டயத்துக்கு வரணுமாமே? ஜோக்குப்பா!!

புது மணப்பெண்
சொர்க்கமும் (கணவன்) நரகமும் (மாமியார்)  ரொம்ப கிட்டகிட்டே  இருக்கே! அதெப்படி?

புது மாப்பிள்ளை 
முப்பது நாளுக்குள்ளேயே,  நல்லவன் வேஷம் உசிர வாங்குதேய்யா!

பழம்"பெரும்" நடிகையின் பரம ரசிகன் 
உச்சியிலே இருந்தப்ப நச்சுன்னு இருந்தீங்க! இப்ப, கேப்பாரில்லாத பீப்பாயா!? :((((

சினிமா இயக்குனர் 
நடுநிசி: தியேட்டரில் தலைப் பிரட்டை, பதிவுலகில் சுறா!

மைனா: பட்ஜெட் வெங்காய வெடி, பாதிப்பு அணுகுண்டு!

சினிமாப் பைத்தியம் 
நாலு நாளாச்சு சாப்பிட்டு! நாப்பது வாட்டி எந்திரன் பாத்தாச்சி!

பிரபல  கவிஞர் 
உடைச்சி மடிச்சி எழுதினாலே,  உயிரை விடறாங்களே கவிதைன்னு!

விக்கல்  முனகல் சேக்கலன்னா , விக்க முடியாதே ஊருக்குள்ளே!

அம்மா ஒப்பாரியை சுத்தமா எழுதினா, அமர்க்களமான கவிதைங்கறாங்க?!

சங்கத் தமிழையும் சென்னைத் தமிழாய் சரிபண்ணாத்தான் சினிமாக் கவிஞன்?!

பிரபல பாடகி 
கீச்சுக்குரலாலேயே பிரபலமாயிட்டமே, குரல் நல்லாருந்தா... கல்யாணமே ஆயிருக்குமோ?

பள்ளி ஆசிரியர்
நீ  ஜென்மத்துக்கும் உருப்படமாட்ட ; பன்றி  மேய்க்கத்தான் லாயக்கு!
(அவிங்க  வாத்தி  அவரைத் திட்டுனது, மனதில் இன்றும் பசுமையாய்! என்னா ஒரு தீர்க்கதரிசனம் பாருங்க!?)

மனைவி (சமைச்சுப் போட்டே சலித்துப் போனவர்)
உங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம்னா, சமையல்காரியைக்  கட்டிக்கிட்டுருக்கணும்!
 
புதிய பதிவர்
சரக்கில்லாமலே பிரபலமாயிட்டாங்களே?  லேட்டா வந்தது நம்ம தப்புய்யா!

இப்படியெல்லாம் எழுதறாங்களே, மக்காஸ் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

தமிழ்திரட்டி 'வெப்மாஸ்டரை'   சிங்கப்பூர் அனுப்பலாமா ? பணத்துக்கு  வழியென்ன ?! 

போட்டோ, மொபைல், முகவரிகூட  போட்டாச்சு! ஆத்தா நான் பிரபலமாயிட்டேன் !!!!!!
  
பிரபல பதிவர்
வாரத்துக்கு மூணு பதிவுக்கு ஒப்பேத்தலாம், மீதிக்கு எங்கய்யா போறது?
(சரக்கு, சரக்குன்னு கூவற கூட்டத்துக்குச் சவுக்கடி!)

உருப்படியா ஒண்ணும்  தெரியாதவனெல்லாம்  பதிவெழுத ஆரம்பிச்சிட்டான்? வெளங்கிடும்*@!

துட்டுதான் இல்ல, புத்தியுமா...?  'வெப்மாஸ்டரை' கவனிச்சா வேலைக்காகுமா?!

வலைச்சரமே  சீந்தலையாம், தமிழ்மணத்துல தாதா ஆவணுமாம்?  உட்ருவமா?

ரசிகர்கள் மாநாடா!? இருக்கறது ஒருத்தன்,  மீதியெல்லாம் பினாமி (நானேதான்)!
(போடாங்...#$!@&*! ஐடியா குடுத்த அல்லக்கையை அடித்து நொறுக்குகிறார்)!

நம்ம ஜால்ராக் கூட்டத்துக்கு இலவசமா மொபைல் குடுத்துட்டோமில்ல?

ஓட்டு கம்மியாவுதே! talktime  காலின்னு சொல்றாங்க பசங்க!?
(யோவ், கணக்கு...! எல்லாத்துக்கும் ரீசார்ஜ்  பண்ணித்தொலைய்யா! பேசனது,  மாசத்துக்கு முன்னூறு ரூவா, இப்ப ஐநூறுக்கு அடிபோடறானுவளே...? இது கட்டுப்படியாகாது... புதுப் பசங்கள புடிக்கணும்! அடுத்த வாரம் Campus Recruitment  ஏற்பாடு பண்ணுய்யா !!!)

ஹூம்! சரக்குக்குத் தலைப்பு தேடின காலமெல்லாம் போச்சே!

கார சாரமான பதிவு(ன்னு தெரியாமல்) போட்டவர்?!
பின்னூட்டம் போடுங்கண்ணா,  பின்னை  உருவிட்டுக்  கைக்குண்டை  வீசுறாங்களேய்யா !

{போன வாரம் (11/03/2011), இப்படித்தான், வீதியிலே (தன் பதிவிலேயே) நடக்கற ரணகளத்தை எட்டா(வ)து மாடியிலிருந்து பயந்து பயந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார், ஒரு பிரபல பதிவர்!}

பதிவுலக நோக்கர் (பெரியவர் சீனா மாதிரி!) 
மெட்டுக்குப் பாட்டு, ஹிட்டுக்குத் தலைப்பு! மேட்டரா!? அப்படீண்ணா?

தலைப்பும் மேட்டரும் ஒத்துப் போகலை, தனிக்குடித்தனம்,  நிர்ப்பந்தம்!

பெயரில் மட்டுமே அப்பாவா, கூடவே வச்சுக்கப் பாருங்கய்யா!

அப்பாடா! நான் நிறுத்திட்டேங்க, இனி நீங்க கோதாவிலே இறங்கலாம்! தட்டி உடுங்க கற்பனைக் குதிரையை!  எனக்கும் சொல்லுங்க...கேக்கறேன்!

அது சரி, ஜோக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு (நீங்க சொல்றீங்களோ இல்லியோ, நம்பளே நைசா ஒரு பிட்டைப் போட்டு வைப்போம்...)! ஆனா, இந்தப் "PASSWORD புதையல்" என்னது? ஒண்ணும்  புரியலியேண்ணு   கேக்கறவங்க,   இந்தப் பதிவின் முன்னோடியான (முதல் பகுதி) PASSWORD புதையல்! வாங்க... வாங்க... அள்ளிட்டுப் போங்க!  படிங்க, எல்லாம்  விளங்கும்!

- மனம் திறந்து ...(மதி).


பின் குறிப்பு:
  1. உறுதிமொழி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே பகிரப் பட்டது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதியது இல்லை, இல்லை, இல்லவே இல்லை!  இந்தப் பதிவில்  உண்மை இருக்க வாய்ப்பே இல்லை! அப்படி என்னையும் மீறி {இப்பத்தான் எல்லாத்துலயும் கலப்படம் ஜாஸ்தியாப் போச்சுங்களே, சுத்தமான பொய் கூட எல்லா எடத்துலயும் கிடைக்கறதில்லீங்க :(((  நல்ல காலம் தேர்தல் வந்துடுச்சி, இப்பக் கொஞ்சம் சுலபமாக்  கிடைக்கலாம் ! :))) எங்க, அவங்க கூட இப்பல்லாம் ஒருத்தரை ஒருத்தர் சகட்டுமேனிக்குத் திட்டி உண்மை பேசறதுலேயே நேரத்தை வீணாக்கிடறாங்க! :))) } எங்காவது உண்மை தென்பட்டால் அதுக்கு நான் நிச்சயமா பொறுப்பு இல்லீங்கோ!! இது நான் வணங்கும் தமிழ்மணம் மீது சத்தியம்!!!
  2. உதற(ல்)மொழி : இவ்வளவு சொல்லியும் நம்பாம, யாராவது நம்பளை மிரட்டவோ, பயமுறுத்தவோ, துன்புறுத்தவோ, வருந்த வைக்கவோ  முயற்சி பண்ணா, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்!! இந்த வலைத்தளத்தையே மூடிட்டு, பழையபடி மாடு மேய்க்கப் போயிடுவேன்! ஆமா...சொல்லிப்புட்டேன்!!  ஜாக்ரதை!!!
  3. மறைமொழி : (ரகசியம்...) அப்புறம் பொழைப்புக்கு என்ன பண்ணுவேனா? ஹையோ, ஹையோ! நம்பளை யாருன்னு நெனச்சீங்க? தனிக்கட்சி ஆரம்பிச்சி, பத்து சீட்டு கேக்கப்போறேங்க! இப்ப உட்டுட்டா, இன்னும் அஞ்சு வருஷம் வயித்தைக் கழுவறது எப்பிடி? 

Monday, March 14, 2011

PASSWORD புதையல்! வாங்க... வாங்க... அள்ளிட்டுப் போங்க!


வாங்க, வணக்கம்! என்னது? பிரபல "கத்தரிக்காய்" பதிவரோட  கடவுச் சொல் (PASSWORD) வேணுமா? அட இருங்க,  இப்படி ஒரேயடியா அவசரப் பட்டா எப்படி? மொதல்ல இதக் கேளுங்க! மத்தவங்க கடவுச் சொல்லைத் தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாலே, உங்க கடவுச் சொல் எப்படிப் பட்டது, உங்களையும், உங்க ரகசியங்களையும், சொத்தையும், சுதந்திரத்தையும்  அது காப்பாற்றுமா என்று  பார்க்க வேண்டாமா? கணினி மயமான இன்றைய உலகத்திலே, கடவுச் சொல் பலமானதாக இல்லேன்னா, அந்தக் கடவுளே வந்தாக்கூட உங்களைக் காப்பாத்த முடியாதுங்களே!  நிறையப் பேர்  இதுக்காக மெனக்கெட்டு, முறையான கடவுச் சொல் உருவாக்கப் பெரிய புதையலே  சேர்த்து வச்சிருக்காங்க! அதைப் பத்தித்தான் பேசப் போறோம் இப்போ! அப்புறமா உங்க மேட்டருக்கு வருவோம்! சரியா?

வந்தவர்: "ஹூம்! சரி சார்! சொல்லித் தொலைங்க! (மனதுக்குள்: நான்  இன்னைக்கி முழிச்ச முகம்  சுத்தமா சரியில்ல...அதுமட்டும் நல்லாத் தெரியுது!)"

(எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு இது.  நிதானமாகப் படிக்க வேண்டியது! அவசரமான வேலை  இருந்தா, போயிட்டு  அப்புறமா  வாங்க! ஆனா, மறக்காம  வாங்க !)

சரி,  "கடவுச் சொல்" நல்லாவே தெரியும் உங்களுக்கு. ஆனா, உங்கள் கடவுச் சொல் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாகவும், மற்றவர்களால் வெகு எளிதில் கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கடினமானதாகவும், மறைபொருள் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?! தெரிந்திருந்தாலும் கூட, அப்படிப் பட்ட கடவுச் சொற்களைத் தான் நீங்கள் பயன் படுத்துகிறீர்களா? இந்தக் கேள்விகளுக்குப்  பெரும்பாலோர் ( >80%) அளிக்கும் பதில் கொஞ்சம் கூடத் திருப்திகரமானதாக இருக்காது என்பதே உண்மை! abc123, abc123$, gopal123, sheela234, ram@home,  password, nopassword, iloveyou, ihatehim, surya143, 243katrina போன்றவை தான் பரவலாக வழக்கிலிருக்கும் கடவுச் சொற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள்   கூரை மேல் ஏறிக் கூவிக்கொண்டு இருக்கிறார்கள், உலகெங்கும்! இப்படிப்பட்ட கடவுச் சொற்கள் எளிதில் தகர்க்கப்பட்டு, உங்கள் வங்கிக் கணக்குகள்,  மின்னஞ்சல் பெட்டிகள், பதிவுலகப் பட்டறை  போன்றவை,  சூறையாடப்படும்  சாத்தியக்கூறுகள்  மிக, மிக, மிக  அதிகம் என்பதே நிதர்சனமான, ஆனால் வயிற்றில் புளியைக் கரைக்கும் உண்மை! இந்தச் சமுதாய சேவையைச் செய்பவர்கள், பெரும்பாலும், வேறு யாருமல்ல! உங்களை நன்றாக  அறிந்தவர்கள்  அல்லது உங்கள் எதிரிகள் தான் என்பது மேலும் அதிர்ச்சி தரும் தகவல் மட்டுமல்ல, சுடும் நிஜம் கூட!

அச்சச்சோ! என்னங்க இது!  உங்களுக்கு ஏன் இப்படி ஒரேயடியா வேர்த்துக் கொட்டுது? உடம்பெல்லாம் நடுங்குது!? அடடே, இந்தாங்க கொஞ்சம் 'ஐஸ்வாட்டர்' குடிங்க, அதுலயே முகத்தையும் கொஞ்சம் கழுவிக்கோங்க... அதோ இருக்கு பாருங்க 'வாஷ்பேசின்', (நான் கைத்தாங்கலா பிடிச்சிக்கிட்டு வர்றேன்) வாங்க... வாங்க! இந்தாங்க  டவல்...தொடைச்சுக்குங்க! பக்கத்து ரூம்ல "ஏசி" போட்டிருக்கு, அங்கே போய் உக்காந்து ஆசுவாசம் பண்ணிக்கிட்டு அப்புறமா பேசலாம்! வாங்க....மெதுவா... மெதுவா ... பாத்து வாங்க! 

(பத்து நிமிடம் கழித்து...) இப்பப் பரவால்லியா? மேல பேசலாமா...? சரி! அப்படியானால், முறையான, வலுவான மற்றும் பாதுகாப்பான கடவுச் சொல் எப்படி இருக்க வேண்டும்? இதோ, சம்பந்தப்பட்ட  வல்லுனர்கள்  சொன்ன சில விதி முறைகள்:
  1. போதுமான நீளம் வேண்டும் :  குறைந்தது 8 குறியீடுகள் இருக்க வேண்டும்.
  2. பெயர்/கள் (தன், உற்றார், உறவினர், நண்பர்கள், எதிரிகள்  பெயர்/கள் ) அதில் இருக்கக் கூடாது.
  3. அர்த்தமுள்ள முழு வார்த்தைகள் அடங்கியிருக்கக் கூடாது.
  4. எண்களும் எழுத்துக்களும் கலந்திருக்க வேண்டும். 
  5. பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் கலந்து இருக்க வேண்டும் (Upper and Lower Case, in English: A, a, B, b போல)
  6. சிறப்புக்  குறியீடுகள் (Special characters: ^ < @  #  :  *  $ ! ; போன்றவை)  இடம் பெற்றிருக்க வேண்டும்.
வந்தவர்(மீண்டும் கொதிப்படைந்து...): "யோவ், உமக்கென்ன  பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்பேர்ப்பட்ட கடவுச் சொல்லை கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன? அப்படியே, ராப்பகலா தூங்காம,  மண்டையப் போட்டு உருட்டி,  கசக்கிப் பிழிந்து  கண்டு பிடிச்சாலும்,  அதை ஞாபகம் வைச்சுக்க  ஒரு முழுநேர உதவியாளரை   வேலைக்கு  வைக்கணுமே, அவருக்குச் சம்பளம் நீங்கதானே  குடுக்கப் போறீங்க?" என்று (உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் கூட) குரலில் அனல்பறக்கக்  கேட்கிறார்!

அதான் இல்லே! நீங்க நினைக்கிற மாதிரி இது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை என்று அடித்துச் சொல்லத்தான் வந்தேன்! அதுக்குள்ள அவசரப் பட்டுட்டீங்களே! அட, நீங்க  வேற, பாவம் உங்களை இல்லீங்க, மேசையைத்தான் அடித்துச் சொல்றேன்! ஆனா, நீங்க மட்டும் பதட்டப்படாம, கொஞ்சம்... பொறுமையாக் கேக்கணும் !  புரிஞ்சுதா ...?

சரி, இப்போ  ரகசியப் புதையலைக் (அதாங்க, கடவுச் சொல் புதைந்து கிடக்கும் சொற்குவியல்!) கண்டுபிடிக்கறது எப்படி, பிறகு அதிலேர்ந்து நல்ல கடவுச் சொல்லைத் தோண்டி எடுக்கிறது எப்படீன்னும் பார்ப்போம்! நாம் தேடும் இந்தப் புதையல் ஏறக்குறைய கடவுள் மாதிரி தாங்க! தூணிலும் இருக்கும்,  துரும்பிலும் இருக்கும் :)))). அதனாலே, கண்டு பிடிக்கறது ரொம்ப சுலபங்க! நமக்குப் பிடித்த, எளிதில்  மறக்க  முடியாத, கவர்ச்சிகரமான சொற்றொடர்கள், பழமொழிகள், பொன்மொழிகள்,   பாடல் வரிகள், நீண்ட தலைப்புகள்  போன்றவை தான்  இந்தப் புதையல்கள் !
  1.  தங்கமாளிகையில்  பார்த்த  வெங்காயம் இப்போ நடைபாதையிலேயே  கிடைக்குதே ! - இது ஒரு ரகசியப் புதையல் (நல்ல உதாரணம்... இல்லே! ஆமாம்...! நானேதான் சொல்லிக்கணும்...! வேற வழி?! நீங்கதான்  shock  அடிச்சா  மாதிரி பாக்கறீங்களே!  சரி, சரி... போனாப் போறது, விட்டுத் தள்ளுங்க! இப்படி வித்தியாசமா சிந்திக்கிறது நல்லதுங்க! ஆனா நல்லா கவனிங்க... இப்பத்தான் கதையே சூடுபிடிக்கப் போவுது! ). 
  2. இந்தப் புதையலில் உள்ள  வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்: Tpvink (எல்லா  நுழைவாயில்களிலும் ஆங்கிலக் கடவுச் சொற்களை உபயோகிப்பது எளிது என்பதால் வார்த்தைகளின் ஒலிவழி மொழி மாற்றம் செய்து கொள்வது அவசியமாகிறது)!
  3. அடுத்ததாக,  எண்ணைச் சேர்க்க வேண்டும். வெங்காயம் 65 ரூபாய் வரை விற்றதால் அதையே கூட எடுத்துக் கொள்ளலாமே! ஆக: 6Tpvink5
  4. இந்தப் புதையல் ஆச்சரியக்  குறியில்  முடிவதால் அதையே  நமக்குத்  தேவையான  சிறப்புக்  குறியீடாகச்  சேர்த்துக்  கொள்ளலாமே! அதை  எங்கே  சேர்க்க  வேண்டும்  என்பதும்  நாமே  தீர்மானிக்க  வேண்டிய விஷயம் தானே! அவ்வளவுதான்!  நமக்குத் தேவையான வலுவான கடவுச் சொல் கிடைத்து விட்டது பாருங்கள்: 6Tpvi!nk5 (ink என்ற முழு வார்த்தையை சிதைக்க அதன் இடையில் ! சேர்த்து விட்டேன், சரிதானே!)
  5. நாம் கண்டுபிடித்த  கடவுச் சொல் - 6Tpvi!nk5 - சட்டதிட்டத்துக்கு உட்பட்டதுதானா என்று நீங்களே பாருங்களேன்! (சட்டதிட்டமா, அப்படீன்னா...?! போச்சுடா...துக்குள்ள மறந்துட்டீங்களா... மொதல்ல சொன்ன ஆறு விதிகள் தாங்க அது! ஹூம்! ஆண்டவா...! இப்படியே போச்சுன்னா,   கிழிஞ்சுடும் லம்பாடி லுங்கி! ) 
ஆக, எளிதில் நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தக் கூடிய, முறையான, வலுவான, பாதுகாப்பான   கடவுச் சொல் தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது (தெரிந்து கொண்டது) இவ்வளவு  தான்: 

  1. முதல் வேலை: உங்களுக்கு எளிதில் நினைவில் நிற்கக் கூடிய, வித்தியாசமான, ரகசியப் புதையலைக் (கடவுச் சொல் புதைந்து கிடக்கும் சொற்குவியல்) கண்டு பிடிப்பது .
  2. அந்தப் புதையலில் இருந்து  கடவுச் சொல்லை வெளிக்கொணர   நீங்கள் கைப்பிடிக்கும் தெளிவா விதிமுறை  வகுப்பது. எல்லா வார்த்தைகளிலிருந்தும் முதல் எழுத்து அல்லது, முதல் வார்த்தையிலிருந்து முதல் எழுத்து, இரண்டாம்  வார்த்தையிலிருந்து  இரண்டாம் எழுத்து, கடைசி வார்த்தையிலிருந்து கடைசி எழுத்து... என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! உங்களுக்குப் புரியும்படியும், நினைவில் நிற்கும்படியும் இருந்தால் போதும் (இருப்பது அவசியம்)!
  3. கடவுச் சொல்லில் கலப்பதற்கான எண்ணை  / எண்களைத்  தேர்ந்தெடுப்பது! எவ்வாறு? ஏன்? எப்படி நினைவில் வைத்துக் கொள்வது? (மாதம், வருடம், தேதி, விலை, 63 இடங்கள், கதவிலக்கம், ஆழ்வார்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, திருக்குறள்....கணக்கிலடங்காது!)
  4. கடவுச் சொல்லில் சேர்க்க வேண்டிய சிறப்புக் குறியீடு/கள் பற்றி முடிவு செய்வது! எது?  எவை? எத்தனை? ஏன்? எதனால்? எங்கே, எதற்காக? என்ன பொருள்? ( ? ! * ^ < # $ @ & ) 
அவ்வளவு தான்! பயன் தரும், பயம் போக்கும், பலத்த,  மனம் குளிரும்  கடவுச் சொல் தயார்! 

இனிமேல், அடடா! கடவுச் சொல் மறந்து போச்சே என்கிற கவலையே வராது உங்களுக்கு! அப்படியே வந்தாலும், புதையலைத் தோண்டினால் புன்முறுவல் எட்டிப் பார்க்குமே! ஐயோ...ஐயய்யோ,  புதையலையே மறந்து விட்டால் என்ன செய்வது என்றா கேட்கிறீர்கள்? பூதத்தின் உதவியைத் தான் நாட வேண்டியிருக்கும், தயாராக இருங்கள்!  அப்படீன்னா கவலையே இல்லையா?! ஏன்?  ஓ! உங்கள் மாமனார் பெயர் மாத்ருபூதமா?....அய்யா, சாமி! ஆளை விடுங்க! இப்பேர்ப்பட்ட மருமகனை/ளை அலாவுதீன் பூதம் வந்து,  அலாக்காய்த் தூக்கிக் கொண்டு போய்  (தசாவதாரம் பாணியில்) பெரிய்ய கல்லுடன் கட்டி,  நடுக்கடலில் தான் போட வேண்டும்...! நான் அம்பேல்! 

மத்தவங்க  யாரும்  அனாவசியமா பயப்பட வேண்டாம்! "கடவுச் சொல்லை மறந்து விட்டீர்களா? இங்கே சொடுக்குங்கள்!"  என்று கூவுமே ஒரு சுட்டி, அதன் தலைமேல  ஒரு கல்லைத் தூக்கிப் போடுங்க, தானா வழி பிறக்கும்!!!

- மனம் திறந்து ...(மதி).

பின் குறிப்பு (குட்டிப் பதிவு!?):
  1.  இந்தப் பதிவு ஒரு குட்டி "Coaching Class" மட்டுமே. நீங்கள்  தேர்விலே வெற்றி  பெற ஆசைப்பட்டால் இங்கே செல்லவும்:  www.passwordmeter.com
  2. நாம்  உயிரைக் குடுத்துக் கண்டுபிடிச்ச 6Tpvi!nk5 அவங்ககிட்ட வாங்கின மதிப்பெண்  80% தாங்க !  :(((
  3. அதை 100% ஆக மாத்தறது எப்படீன்னு நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க, நான் சொல்லித்தர வேண்டியதில்லை! :)))) 
  4. இந்தப் பதிவும் , வழக்கம் போல, கொஞ்சம் நீண்டு போச்சுங்க! குறைப்பது எப்படீன்னு தெரியலை! தெரிஞ்சா சொல்லுங்க!
  5. இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா ? பயனுள்ளதா?  இன்னும் நிறையப் பேர் இதைப் படிக்கணும்னு நீங்க விரும்பறீங்களா? அப்போ, என்னவெல்லாம் பண்ணனும்னு உங்களுக்கே தெரியுமே! தவறாம பண்ணுங்க!
  6. எச்சரிக்கை: இந்தப் பதிவின் தொடர்ச்சி, மிகவும் பரபரப்பானது, சுவாரஸ்யமானது அப்படீன்னு ஏன் சொல்லலைன்னு நீங்க கேக்கக் கூடாது பாருங்க, அதான் சொல்லிப்புட்டேன்! நேரமும், மனசும் ஒத்துழைச்சா அதையும் படிங்களேன்:   தலைப்பு, மேட்டரு... தனிக்குடித்தனம்!

    Friday, March 4, 2011

    தாத்தா, பாட்டி...நிலை என்ன ?

     
    ஒரு விதத்தில் பார்த்தால், Abraham Maslow  சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை தான் தாத்தா, பாட்டி


    (Image Courtesy: http://en.wikipedia.org)

    என்னை நானே அறியாத என் குழந்தைப் பருவம்

    உலகை நான் புரிந்து கொள்ளவில்லை என்று உணராமல் உலகையே எதிர்க்கும், பழிக்கும், உதாசீனப் படுத்தும் இளமைப் பருவம்!

    எதற்காக வாழ்கிறேன், எங்கே போகிறேன், ஏன் இப்படி எதன் பின்னாடியோ எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கூடப் பார்க்க நேரமில்லாமலே முடிந்து விடுகின்ற குடும்பத் தலைவன், தலைவி வாழ்க்கை!  
     

    என் பிள்ளைகளே கூட என்னைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப் படுத்தி, ஒதுக்கி வைத்த போதும்

    அக்கம் பக்கத்தாரும் கூட ‘நச்சரிக்கும் பெருசுகள்’  என்று தவிர்த்து விடும் போதும்,  
     
    என் வலிவின்மை, வனப்பின்மை, பொருளின்மை எல்லாவற்றையும் துச்சமாக்கித் தூரத் தள்ளிவைத்து, எல்லாம் தெரிந்த குழந்தையாய் என்னை மாற்றி விட்டு, எதுவும் தெரியாத என் பேரக் குழந்தை என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டுகிறதே

    சொர்க்கம் என்பது எப்படி இருக்கும் என்று, அதன் வாயிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு, இங்கேயே ஒரு "virtual reality show" வாக வழங்கி, வாழ்வின் சுமையான இறுதிக் காலத்தை சுவைக்க வைக்கிறதே அந்தப் பிஞ்சு உள்ளம்;  


    இது வரை இல்லாத அளவுக்கு, எனக்கே ஆச்சர்யம் தரும் வகையில், நான் எவ்வளவு நல்லவனாக இருக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லி என்னையே மாற்றி விடுகிறதே அந்தப் பேரக் குழந்தை

    அதனால் தான் (மீண்டும்) சொல்கிறேன், தாத்தா பாட்டி நிலை "உச்சக்கட்ட தேவைகள்" பூர்த்தி அடையும் நிலை என்று!

    - மனம் திறந்து... (மதி).


    பின் குறிப்பு: இந்தப் பதிவு உருவாகக் காரணமான டுபுக்காரின் பதிவை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்!